
இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13.01) காலை 10மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி 27.5 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 94ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக சயரூபன் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ் அணி சார்பாக விதுசன் 3 இலக்குகளையும், நிதுசன் 3 இலக்குகளையும் பெற்று கொடுத்தனர்.
95 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய யாழ்மாவட்ட அணியினர் 15.4 பந்து பரிமாற்றங்களில் மூன்று இலக்குகளை மாத்திரம் இழந்து 95 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் யாழ் அணி சார்பாக பானுசன் 31 ஓட்டங்களை பெற்று கொடுத்திருந்தார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக யாழ் அணியின் விதுசன் தெரிவு செய்யபட்டதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ் அணியின் பானுசனும். சிறந்த பந்து வீச்சாளராக யாழ் அணியினை சேர்ந்த நிதுசனும் தெரிவுசெய்யபட்டிருந்தனர். வெற்றி பெற்றவர்களிற்கான கிண்ணங்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கபட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண துடுப்பாட்ட சங்கதலைவர் மதிவாணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வடமாகாண துடுப்பாட்ட பயிற்று விப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.




