வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமிக்கு பொலிஸ் பாதுகாப்பு : அச்சுறுத்தல் குறித்து விசாரணை!!

894

vijayalakshmiவட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய பிரதம செயலாளரின் வீட்டிற்கும் தனிப்பட்ட முறையிலும் வெவ்வேறாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவரது கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பு மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி தொடர்பிலும் விசேட விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தொலைபேசி அச்சுறுத்தல் தொடர்பில் பிரதம செயலாளர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ..

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷின் கையடக்க தொலைபேசிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு இலக்கம் தெரியாத அழைப்பு ஒன்று வந்துள்ளதுடன் நாங்கள் இல்லை என்று நினைத்துக் கொண்டா செயற்படுகின்றீர்கள், கவனமாக இருங்கள், பதவி விலகுங்கள் என்று கடுமையான தொனியில் அச்சுறுத்தியுள்ளனர்.

இது தன்னை அச்சுறுத்துவதற்காக எடுக்கப்பட்ட அழைப்பு என்பதை உணர்ந்து கொண்ட அவர், அந்த அழைப்பை உடனடியாக துண்டித்துள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவர் அதற்கு பதில் கொடுக்கவில்லை.

இந்நிலையில், சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் வெளிநாட்டு தொலைபேசி இலக்கமொன்றிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.

நீங்கள் கவனமாக இருங்கள் இது அதிகார போட்டிக்குரிய காலம் அல்ல. நீ அழித்தொழிக்கப்படுவாய் என்று அந்த எஸ். எம். எஸ். மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதம செயலாளர், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாட் பதியுதீன் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் நேரில் சென்று பிரதம செயலாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவிக்கையில்..

தனது மாகாண பிரதம செயலாளர் மீது விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலை அடுத்து தேவையான பாதுகாப்பை வழங்க ஆளுநர் என்ற வகையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுத்துள்ளேன்.

திருமதி விஜயலட்சுமி ஒரு சிறந்த அரசாங்க அதிகாரியாவார். தமது பணிகளை சிறந்த முறையில் செய்யக்கூடியவர். இந்நிலை வெளிநாட்டிலிருந்து செயற்படும் சில தீயசக்திகள், புலம்பெயர்ந்தவர்கள் அவரை அச்சுறுத்தி அவரது செயற்பாடுகளை முடக்க முயற்சிக்கின்றனர்.

அவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணியவோ, பயப்படவோ, போவதில்லை. எனது மாகாணத்தில் சேவையாற்றும் சிறந்த அதிகாரிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்றார்.

தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாக வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி தெரிவித்தார்.