தீ விபத்து

வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகை ஒன்றில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. இரவு வேளையில் மாட்டுக் கொட்டகை பெரிதாக தீ பிடித்து எரிவதைக் கண்ட அயலவர்கள் அவ் வட்டாரத்தைச் சேர்ந்த நகரசபை உறுப்பினர் லரீப்பிற்கு தொலைபேசியில் சம்பவத்தை தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து குறித்த நகரசபை உறுப்பினர் உபதவிசாளர் க.குமாரசாமி மற்றும் நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் அப்பகுதி மக்கள் தீ தொடர்ந்தும் பரவாமல் கட்டுப்படுத்தினர். எனினும் மாட்டு கொட்டகை முற்றாக எரிந்து நாசமாகியது. இதில் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் வவுனியா பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






