வவுனியா சூடுவெந்தபுலவில் இது எங்களது பூர்வீக பூமி என தெரிவித்து முஸ்ஸிம்கள் போராட்டம்!!

1051

முஸ்ஸிம்கள் போராட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று (05.07) மதியம் தொழுகை முடிந்த பின்னர் அப்பகுதியினை சேர்ந்த முஸ்ஸிம் சமூகத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

சூடுவெந்தபுலவு மேற்குளம், கறக்கல் பாதை வழியே காணப்படும் எங்களது பூர்வீகமான மேட்டுக்காணியில் 1954, 1964ம் ஆண்டு காலம் தொடக்கம் பராமரித்து விவசாயம் மேற்கொண்டு வருகின்றோம்.

428 ஏக்கர் காணிகள் வறுமை ஒழிப்புக்காக பயிர்செய்கை மேற்கொள்ள அரசாங்கத்தால் எமக்கு வழங்கப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு முதல் குறித்த காணிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது காணிகளில் மீளவும் பயிர்செய்கை செய்து வருகின்றோம்.

2013ம் ஆண்டு வடமாகாண சபை காணி ஆணைக்குழுவினரால் பார்வையிடப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டு அனுமதிப்பத்திரமும் தயார் செய்யப்பட்டும் இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இக்காணியினை வனபரிபாலன திணைக்களம் தங்களுக்கு சொந்தமான பகுதியென கூறி இக்காணிகளை அபகரிக்க பலதரப்பட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் போன்ற அனைத்து தலைவர்களுக்கு தெரியப்படுத்தி, நேரில் வந்து பார்வையிட்ட போதிலும் அவர்களினாலும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எனவே எமக்கு எமது காணிகளைப் பெறுவதற்கு உரிய தீர்வு வேண்டும் என தெரிவித்தே இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

மதியம் 1 மணி தொடக்கம் 1.30 மணிவரை இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இது எங்களது பூர்வீக பூமி, 1940, 1960ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட உறுதிகள் எம்மிடம் உண்டு, இது பாரம்பரியமாக பராமரிக்கப்படும் விவசாயப் பூமி, எமது பூர்வீக நிலங்ளை அபரிக்க துடிக்கம் வனவள திணைக்களமே, அரசே எமது வருமானத்தை பறித்து சொத்தை அழித்து எம்மை கொல்லாதே, அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரசேகர மற்றும் சூடுவெந்தபுலவு கிராம சேவையாளர் ஜெயபாலன் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை சூடுவெந்தபுலவு கிராம சேவையாளரிடம் ஒப்படைத்திருந்தனர்.