வவுனியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி!!

1697

உணவில் இறந்த பல்லி

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி காணப்பட்டதையடுத்து உணவு விநியோகத்தருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால் இன்று 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான போசாக்கு உணவினை வழங்கும் பொறுப்பு ஓப்பந்த அடிப்படையில் தனியார் ஒருவரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று இன்றும் போசாக்கான உணவினை வழங்க குறித்த நபர் வருகை தந்த போது பாடசாலையின் உணவு கண்காணிப்பு குழு குறித்த உணவினை பரிசோதித்துள்ளனர். இதன்போது உணவின் மேல் இறந்த பல்லி ஒன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை உணவு கண்காணிப்பு குழு பாடசாலை அதிபரின் கவனத்திற்கு சென்றதுடன், இதையறிந்த பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் அதிபருடன் கலந்துரையாடியதையடுத்து பொது சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

பாடசாலைக்கு வருகை தந்த பொது சுகாதார பரிசோதகர் உணவினை பார்வையிட்டதுடன் பல்லி இறந்து காணப்பட்டமை தொடர்பில் உணவு விநியோகிஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த உணவு விநியோகஸ்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.