கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் சென்னையில் : எப்படி வந்தார் என நினைவில்லையாம்!!

487

இலங்கைத் தமிழர்

சென்னையில் சுற்றித்திரிந்த ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒரு கனேடிய குடிமகன் என தெரியவந்துள்ள நிலையில், தான் எப்படி சென்னைக்கு வந்தேன் என்பது தனக்கு நினைவில்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.

உள்நாட்டுப்போரின்போது இலங்கையிலிருந்து தனது சகோதரருடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு (45) தான் எப்படி சென்னை வந்தேன் என்றோ,ஹோட்டல் ஒன்றில் தங்கினேன் என்பதோ சுத்தமாக நினைவில்லை.

அவர் ஒரு மாதம் அரசு மறுவாழ்வு மையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள் கிருஷ்ணப்பிள்ளையின் உடைமைகளை சோதனையிட்டுள்ளார்கள். அப்போதுதான் அவர் ஒரு கனேடிய குடிமகன் என்பதும் தலைசுற்றல், வாந்தி மற்றும் நெஞ்சு வலிக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மறுவாழ்வு மைய ஊழியர்கள் கனேடிய தூதரகத்தை தொடர்பு கொள்ள, அவர்கள் கிருஷ்ணபிள்ளையில் சகோதரருக்கு தகவலளித்துள்ளார்கள்.

ஒரு மாத சிகிச்சைக்குப்பின், தற்போது மறுவாழ்வு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கிருஷ்ணப்பிள்ளை, தனது சகோதரருடன் இணைந்து கொள்வதற்காக கனடாவுக்கு விமானம் ஏறிவிட்டார். இன்று நள்ளிரவு அளவில் அவர் டொராண்டோ சென்றடைவார் என்று மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.