வவுனியாவில் பரீட்சைக் காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த தடை!!

1068

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த தடை

இம்மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களின் நன்மைக் கருதி எமது ஆலயச்சூழலில் ஒலிபெருக்கிச் சாதனங்களின் ஒலி அமைப்புக்களை குறைத்து ஆலய பூஜைகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில், தற்போது அனைத்து ஆலயங்களிலும் மஹோற்சவ காலங்கள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாலயங்கள் விழாவிற்கான ஆயத்தங்களை தாங்கள் தங்களது வசதிற்கேற்பவாறு அனைவராலும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.

அந்நடவடிக்கை அனைவரினது மனக்கிடக்கைகளை வெளிப்படுத்துவனவாக அமைவதே சிறப்பு. ஆலயங்கள் எப்போதும் நமது மன அமைதிக்கும், நிம்மதிக்காகவும் வழிபாடுகளை இயற்றுகின்ற இடங்களாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்புக்களை கொண்ட இக்காலப்பகுதிகளில் எமது ஆலயத் திருவிழாக்கள் ஒவ்வொன்றும் நமது பாரம்பரியத்தினையும் எமது வரலாறுகளையும் பறைசாற்றி நிற்கின்றன.

இன்று பல மனமாற்றத்திற்குட்பட்ட பல மனிதர்கள் மக்களால் திசை திருப்பப்பட்டு அவர்களின் கலாச்சாரங்கள் மத நம்பிக்கைகள் சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. என்பதை ஒவ்வொரு மனிதராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆனாலும், இந்த மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் மாணவர்கள் பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கின்ற காலப்பகுதிகளாகும். அதனால், நமது ஆலயச் சூழலில் ஒலிபெருக்கி சாதனங்களின் ஒலி அமைப்புக்களை குறைத்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

கல்வி என்பது அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இன்றியமையாத சொத்தாகும். எனவே, இந்தப் பரீட்சை காலப்பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின் சத்தங்களை குறைத்து மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ஆலய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.