கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மர்ம விமானம் : உடனடியாக தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை!!

305

மர்ம விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைத்தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமானம் குறித்த தகவல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

பாதுக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குறித்த விமானம் சில நாள்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பியுள்ளது.

எனினும், அவ்விமானம் எந்த நாட்டுக்குரியது, எதற்காக வருகைத்தந்திருந்தது போன்ற விடயங்கள் தெரியவரவில்லை. ஆகையினால், அதில் வந்தவர்கள் யார், இங்கு என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்” என அவர் கோரினார்.

இதேவேளை, N513SN என மாத்திரமே குறிக்கப்பட்ட விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது. அந்த விமானம் முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டுள்ளதுடன், அதில் எந்தவொரு பெயரும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே, விமானம் குறித்த தகவல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கோரிக்கை விடுத்துள்ளார்.