ரிசாட் பதியுதீனுக்கு அமோக வரவேற்பு

வர்த்தக கைத்தொழில், நீண்ட கால அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் பதவியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு வவுனியாவில் இன்று மாலை அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. வவுனியா, மன்னார் வீதியில் உள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அவரது ஆதரவாளர்களால் குறித்த வரவேற்பு வழங்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீ விரவாத தா க்குதலையடுத்து அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லீம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்படவில்லை. இந் நிலையில் அவர் கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து அமைச்சராகி மீண்டும் வவுனியாவிற்கு வருகை தந்த நிலையிலேயே இவ் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக இணைப்பாளர் முத்து முகமது, அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அமைச்சருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.




