வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்!!

262

புதிய புகையிரத சேவைகள்

வடக்கிலிருந்து காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு முதல் காங்சேன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்பமாகியுள்ளதாகவும் இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழிலிருந்து இன்று காலை 06.25இற்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட 4082 இலக்க புகையிரதம் காலை 07.43இற்கு கிளிநொச்சியையும், வவுனியாவை 09.02இற்கும் மாலை 04.00 மணிக்கு கொழும்பையும் சென்றடையும்.

இரண்டாவது புகையிரத சேவையில் 4088 இலக்க புகையிரதம் மாலை 05.40இற்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு யாழ். புகையிரத நிலையத்தை 06.16இற்கு வந்தடையும். அங்கிருந்து 06.40இற்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு அதிகாலை 04.00 மணிக்கு கொழும்பை சென்றடையும்.

இதுவரையில் காங்கேசன்துறையிலிருந்து 06.00 மணிக்கு புறப்பட்டு யாழ். வந்தடைந்து, யாழிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை இன்று முதல் காங்கேசன்துறையிலிருந்து இரவு 07.30இற்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை 08.10க்கு வந்தடையும்.

மீண்டும் யாழ். புகையிரத நிலையத்திலிருந்து 08.25இற்கு புறப்படவுள்ள இந்த புகையிரதம் அதிகாலை 04.40இற்கு கொழும்பை சென்றடையும்.

மேலும், இன்றைய தினம் காலை 08.50இற்கு கொழும்பிலிருந்து ஆரம்பமான முதலாவது புகையிரத சேவை மாலை 06.31இற்கு யாழ். புகையிரத நிலையத்தை வந்தடையும்.

இந்த புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை 03.25இற்கும், கிளிநொச்சி புகையிரத நிலையத்தை மாலை 4.56இற்கும் வந்தடையவுள்ளது.

சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் போன்று இதற்கான கட்டணங்கள் அறவிடப்படும் என்றும் இந்த சேவைகள் மூலம் பணிபுரிவோர் பெரிதும் அனுகூலமடைவர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது புகையிரத சேவை கொழும்பிலிருந்து இரவு 07.15இற்கு புறப்பட்டு அதிகாலை 04.20இற்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

இதுவரையில் கொழும்பிலிருந்து 8.30க்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை இன்று முதல் இரவு 9.00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை காலை 05.04இற்கு வந்தடையவுள்ளது.

கொழும்பு மற்றும் யாழிலிருந்து தினசரி காலை மாலை இடம்பெறவுள்ள இந்த இரண்டு புதிய புகையிரத சேவைகள் பரீட்சார்த்தமாக ஒருமாதம் இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய தலைமை அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.