100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான லொறி : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!

511

விபத்துக்குள்ளான லொறி

தலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதிக்கு கோதுமை மா ஏற்றிச்சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதில், லொறியின் சாரதி, உதவியாளர் உட்பட 5 பயணித்துள்ளனர். இதேவேளை, ஐவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த கனரக லொறியில் இருந்த 800ற்கும் மேற்பட்ட கோதுமை மா பைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மாவனெல்ல பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு 10 டொண் தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று அகரகந்தை பகுதியில் அமைந்துள்ள நீர் மின் உற்பத்தி நிலைய கட்டடத்தின் மீது விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.