வடமாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கை : நள்ளிரவில் சிக்கிய பல மோசடிகள்!!

273


ஆளுநரின் அதிரடி நடவடிக்கை



கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரால் தீடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விசேட பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



மக்கள் பாதுகாப்பை உறுதி நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்டன. இதில் சுமார் 50 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது காலாவதியாகிய வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரங்கள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட வாகன நடத்துனர்கள் மற்றும் நடத்துனருக்கான அடையாள அட்டைகள் இல்லாத வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.




ஏ9 வீதியில் அதிகளவில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் முகமாக ஆளுநரின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. திடீர் சோதனை நடவடிக்கையின் போது 60 சதவீதமான பேருந்துகள் சட்டத்தேவைகளை பூர்த்தி செய்யாதவையாகவும் மேலும் வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய பேருந்துகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டமை இணங்காணப்பட்டுள்ளன.


வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து வடமாகாணத்தில் தொடர்ந்தும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பயணிகள் தங்கள் பிரயாணத்தின்போது தாம் பயணிக்கும் பேருந்துகள் அனுமதிப்பத்திரங்கள் கொண்டுள்ளனவா என்பது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.