இறந்த தந்தையின் உடல் முன் திருமணம் : நெகிழ்ச்சி ஏற்படுத்திய மகன்!!

349


நெகிழ்ச்சி ஏற்படுத்திய மகன்



தந்தையின் ஆசீர்வாதம் வேண்டி, உ யிரிழந்த அவருடைய உடல் முன் மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வமணி – செல்வி தம்பதியரின் மகன் அலெக்சாண்டர் (30).



இவரும், மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் – அன்னபூரணி தம்பதியரின் மகள் ஜெகதீஸ்வரி (27) என்பவரும் மயிலத்தில் உள்ள தனியார் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர்.




ஒரே இடத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக, இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 2ஆம் திகதி மயிலம் முருகன் கோயிலில் வைத்து திருமணமும், அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில், திருமணத்திற்கான வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி, நேற்று (9ஆம் திகதி) காலை திடீரென உயிரிழந்தார். திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், தெய்வமணி உயிரிழந்தமையால் குடும்பமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியது.

அதேபோல, தனது திருமணத்தை உடனிருந்து நடத்தி ஆசீர்வதிக்காமல் தந்தை உயிரிழந்துவிட்டாரே என்ற சோகத்தில் இருந்தார் மணமகன் அலெக்சாண்டர். ஒருகட்டத்தில், ”அப்பாவின் ஆசி இல்லாமல் என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது. அவர் முன்னிலையில்தான் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும். அவரது உடலின்முன் இப்போதே நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோம்” என்று கூற, உறவினர்கள் திகைத்து நின்றனர்.


ஆனாலும், தந்தை மீது மகனுக்கு இருந்த பாசத்தை புரிந்துகொண்ட உறவினர்கள், கொணமங்கலத்தில் உள்ள ஜெகதீஸ்வரி மற்றும் அவரது பெற்றோரிடம் நடந்ததை எடுத்துக்கூறி, திருமணத்துக்கு சம்மதம் பெற்றனர். அதையடுத்து, உயிரிழந்த தெய்வமணிக்கு பட்டுச் சட்டை, பட்டு வேட்டி அணிவித்து, அவருடைய கையில் தாலியை வைத்து ஆசீர்வாதம் பெற்று, கண்ணீரோடு ஜெகதீஸ்வரியின் கழுத்தில் தாலி கட்டினார் அலெக்சாண்டர்.

இந்த சம்பவம், அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்ட மக்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.