மார்பளவு வெள்ளம் : ஒன்றரை கி.மீ குழந்தைகளை தோளில் சுமந்த போலீஸ் : குவியும் பாராட்டுக்கள்!!

240

மார்பளவு வெள்ளம்

இந்திய மாநிலம் குஜராத்தில் மார்பளவு வெள்ளத்தில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக தூக்கிச் செல்லும் காவலரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு 11 பேர் மரணமடைந்துள்ளனர். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக மீட்புப் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

இதுவரை கிட்டத்தட்ட 6,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மார்பளவு வெள்ளத்தில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக பொலிசார் ஒருவர் தூக்கிச் செல்கிறார்.

பிருத்விராஜ் சிங் ஜடேஜா என்ற அந்த காவலர், கிட்டத்தட்ட 1.5 கிலோ தூரம் வெள்ள நீரில் இரண்டு குழந்தைகளையும் தூக்கிச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த காவலரின் அர்ப்பணிப்பு உணர்வையும், துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை கண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன், காவலரின் பணியை பாராட்டியுள்ளார். அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு முன் உதாரணமாக காவலர் பிருத்விராஜ் சிங் ஜடேஜா உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்தச் செயலுக்கு தலைவணங்குகிறேன் எனவும் லட்சுமணன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதுடன் காவலரின் உழைப்பை பாராட்டி வருகின்றனர்.