ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : கண்ணீர் சம்பவம்!!

296

கண்ணீர் சம்பவம்

கேரளாவில் பெய்து வரும் கனமழை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை 72 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 58 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மலப்புரம் அருகே நேற்று மீட்பு பணி நடைபெற்றது. அதில் கீது என்ற 22 வயது இளம் பெண் உட்பட சிலர் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்களைத் தேடும் பணி நடந்தது. அப்போது ஒரு இடத்தில் கீது, தனது ஒரு வயது மகன் துருவனை நெஞ்சோடு அணைத்தபடி கிடந்துள்ளார். இதைக் கண்ட மீட்பு குழுவினர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினர். அதிகாரிகள் மட்டுமின்றி, அங்கிருந்த மக்கள் சிலரும் இதைக் கண்டு கண்கலங்கினர்.

அதன் பின் அவர்களின் உடல்களை மீட்டனர். கீதுவின் கணவர் சரத்தும் நிலச்சரிவின் போது அவர்களுடன் தான் இருந்துள்ளார். ஆனால் அவர் எப்படியோ அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.