மலையாள பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மீரா ஜஸ்மின். தமிழிலும் ரன், சண்டைக்கோழி உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருக்கும் மாண்டலின் கலைஞர் ராஜேசுக்கும் காதல் எனவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கிசு கிசுக்கள் வந்தன.
இந்நிலையில் நடிகை மீராஜாஸ்மின் திருவனந்த புரத்தைச் சேர்ந்த பொறியிலாளர் அனில் ஜோண் டைட்டஸ் என்பவரை வருகிற பெப்ரவரி மாதம் 12ம் திகதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர்களின் திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். ஆலயத்தில் நடக்க இருக்கிறது. இது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடப்பதாகவும், திருமண விழாவில் மலையாளம் மற்றும் தமிழ் பட உலக முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொறியிலாளர் அனில் ஜோண் டைட்டஸ், சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து சிடெக் பட்டம் பெற்றுள்ளார். தற்போது துபாயில் உள்ள சர்வதேச கம்பனியில் பணிபுரிகிறார். இவரது பெற்றோர் டைட்டஸ்–சுகத குமாரி. மீராஜாஸ்மினின் பெற்றோர் ஜோசப் பிலிப்– எலியம்மா. இவர்கள் திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சில மாதங்களுக்கு முன்பே அனில் ஜோண் டைட்டஸ்–மீராஜாஸ்மின் இருவரின் பெற்றோரும் இவர்களுக்கு திருமணம் பேசி முடிவு செய்ததாகவும், பிப்ரவரி 12ம் திகதி நெருங்கி வருவதால் இந்த தகவல் இப்போது வெளியாகி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மீராஜாஸ்மின் தற்போது தமிழில் வி.டி.வி. கணேசுடன் இங்க என்ன சொல்லுது என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகர் ஜெயராம் நடிக்கும் ஒண்ணும் மிண்டாதே’என்ற படத்திலும் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் இவர் திரையுலகில் நீடிப்பார் என கூறப்படுகிறது.