இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையால் ஆபத்து : முப்படையினரும் தயார் நிலையில்!!

291

காலநிலையால் ஆபத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்கக்கூடும். நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தமாக 18 வீடுகள் முழுமையாகவும், 292 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை கருத்திற் கொண்டு 24 மணி நேரமும் மூன்று மொழிகளிலும் 117 என தொலைபேசி மூலம் தகவல்களைப் பெறலாம் என மத்திய நிலையத்தின்பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.

முறிந்து விழக்கூடிய மரங்கள் தொடர்பில் கவனம் தேவை. வீடுகளின் அருகிலுள்ள ஆபத்தான மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது அவசியம். இடி மின்னல் தாக்கல் குறித்தும் கவனம் தேவை எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இடர் நிலைமைகளை சமாளிக்க பொலிசாரும் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இடர்காப்பு மத்திய நிலையங்கள் ஊடாக மாவட்ட மட்டத்தில் சகல விடயங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.