எச்சரிக்கும் ஆய்வு

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் மூன்றில் ஒருபகுதி 2050ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதனின் செயல்பாடுகளால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது, இதுதொடர்பான ஆய்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன.

இதனால் பனிப்பாறைகள் உருகுவதுடன், ஓசோன் மண்டலத்தில் துளை, நச்சு வாயுக்களால் பாதிக்கப்படுதல், தோல் சம்பந்தமான நோய்கள் என பல மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன.

மிக முக்கியமாக மலைகளில் உள்ள பனிக்கட்டுகள் உருகுதல், வெப்பத்தினால் கடல்நீரின் கனஅளவு அதிகரித்தல் போன்ற காரணங்களினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே போகின்றது.

ஒரு வருடத்திற்கு 0.4 மி.மீ அல்லது ஒரு நூற்றாண்டுக்கு 2 அங்குலம் அளவிற்கு நீர்மட்டம் உயருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 8 அங்குலம் வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி 2050ம் ஆண்டுக்குள் மூழ்கிவிடும் என எச்சரித்துள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாலும், பருவ நிலை மாற்றத்தாலும் இது நடப்பது நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஏற்கனவே அந்நகரின் பல பகுதிகள் மூழ்கியுள்ள நிலையில், தீவிர நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்தோனேஷியா புதிய தலைநகரை தேட வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




