பரிதாப நிலை

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகைத்தந்து தேர் திருவிழாவை சிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், தேர்திருவிழாவை காணவந்த இருபது பேரின் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், கையடக்க தொலைபேசி உள்ளிட்ட உடமைகளும் இதன் போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஆலயத்தின் வெளிவீதியில் வைத்து இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆலயத்தின் வெளிவீதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு கெமராக்கள் இருந்த நிலையில், நூற்றுக்கணக்கான பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நகையினை பறிகொடுத்த பலர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் ஒரு சிலர் முறைப்பாடு செய்யவில்லை என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.




