ஒரே போட்டியில் பல உலக சாதனைகளைப் படைத்த நியூசிலாந்து அணி!!

507

Newzealand

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது, இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி குயிண்ஸ்டவுனில் நடைபெற்றது. மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் வீரர் அண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நியூசிலாந்து படைத்துள்ளது.

அதிக சிக்சர்

அண்டர்சன் 14 சிக்சர் அடித்ததன் மூலம், ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 3ம் இடத்தை பிடித்தார்.

முதல் இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மாவும்(16 சிக்சர்), இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் வட்சனும்(15 சிக்சர்) உள்ளனர்.

மற்றொரு உலக சாதனை

அண்டர்சன் 14, ரைடர் 5, மெக்கல்லம் 3 என நியூசிலாந்து அணி போட்டியில் 22 சிக்சர் விளாசியுள்ளது. ஒரே போட்டியில் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்சர் இதுவே, இதுவும் ஒரு உலக சாதனை தான்.

இதற்கு முன் இந்தியா கடந்தாண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 19 சிக்சர் விளாசியது ஆனால் அது 50 ஓவர் போட்டி. நியூசிலாந்து அடித்திருப்பது வெறும் 21 ஓவரில் என்பது குறிப்பிடத்தக்கது.