
வவுனியா பொது வைத்தியசாலைக்கு போதுமான தாதியர்கள் வழங்கப்படவில்லை என வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2014ம் ஆண்டு தாதியர் பயிற்சி பெற்று வெளியேறிய சுமார் 1800க்கும் மேற்பட்ட தாதியர்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு 95 தாதியர்கள் கோரியிருந்த போதிலும் 12 தாதியர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் அவர்களில் ஒன்பது பேரே தமது பொறுப்பை ஏற்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வடமாகாணத்திற்கு 46 தாதியர்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 41 பேரே கடமையை பொறுப்பேற்றமையால் மாகாணத்திற்கு தேவையான தாதியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் போதுமான தாதியர்கள் வழங்கப்படவேண்டும் என்றும் சகல வசதிகளும் உள்ள வவுனியா பொதுவைத்தியசாலைக்கு ஒன்பது தாதியர்கள் போதுமானவர்கள் இல்லை எனவும் இனிவரும் காலங்களில் தாதியர் படிப்பை முடித்து வெளியேறுபவர்களை இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கக் கோரி இவ் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் 12.00 மணி தொடக்கம் 01.00 மணி வரை வவுனியா பொது வைத்தியசாலை முன்றலில் நடைபெற்றது.




