காலநிலை தொடர்பில் அவசர எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று மாலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள காலநிலை தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இன்றிரவு மற்றும் காலை வரை அடைமழை அதிகரிக்கும் என திணைக்களத்தின் அதிகாரி அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார். கிங்கங்கை, நில்வளா கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிக்கும் எனவும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை பகுதியில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 340 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் பாதிக்கப்படக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ள ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதெனவும், கீழ் மட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அவதானத்தை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் காலி, மாத்தறை மாவட்டங்களின் தாழ்நில பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்அறிவித்துள்ளது.382 குடும்பங்கள் வெள்ள அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர் 10 வீடுகள் வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 365 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

எதிர்வரும் 24 மணித்தியாலங்கள்பற்றி எச்சரிக்கையாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

களுத்துறை, காலி, கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் பல்வேறு வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. நாகொட, பத்தேகம, இமதுவ, நெலுவ, தவலம ,ஹிக்கடுவ, யக்கலமுல்ல ஆகிய பிரதேசங்களில் நிலசறுக்கல்கள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




