புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால்..
நாடாளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் இன்று (26.09.2019) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள முரண்பாடுகள், கடந்த அமைச்சரவை கூட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தாமை உட்பட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா புகையிரத நிலைய அதிபர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புகையிரத சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதுடன், முற்பதிவுகளை மேற்கொண்டவர்கள், பயணிகள் எனப் பலரும் புகையிரத நிலையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் இராணுவத்தினர், பொலிசார் புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அதிகாலை 3.35 இற்கு வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்க வேண்டிய ரஜட்ட ரஜனி புகையிரதம் வவுனியாவிலேயே தரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.