கடும் வரட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகள் தற்கொலைக்கு முயல்கின்றனர். எனவே இத் துயரை தடுத்த நிறுத்த அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
போரினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து ஒருவழியாக தமது சொந்த மாவட்டங்களில் குடியேறியுள்ள மக்களில் ஒரு பகுதியினர் தமது வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் பொருட்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இந்த காலபோக நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர்.
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததைப் போன்று வறுமையால் வாடும் விவசாயிகளை இயற்கையும் கைவிட்டுவிட்டது. போதிய மழையின்மையால் பயிர்கள் நாசமாகிவிட்டன. மழை இன்மை காரணமாக குளங்களில் இருந்த நீரும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் தமது நெற்செய்கையைக் கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.
இவ்வாறான நிலையில் பல விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த முதலாம் திகதி மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் கிராமத்தைச் சேர்ந்த சி.எஜமான் (54) என்ற விவசாயி மழையின்றி விவசாயம் அழிவடைந்தமையால் விரக்தியுற்று தற்கொலை செய்துள்ளார்.
யுத்தம் காரணமாக பாதிப்படைந்த குறித்த விவசாயி தற்போது தமது வாழ்வாதாரமும் இயற்கையால் கைவிடப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இதனால் இவரது குடும்பம் இன்று நிர்கதியான நிலையில் உள்ளது. இந்த நிலை மேலும் தொடரக் கூடிய அபாய நிலைகளே விவசாயிகள் மத்தியில் உள்ளன. எனவே இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர வங்கியில் கடன்பட்டு பெரும் சிரமத்தின் மத்தியில் பயிர்ச்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் வறட்சியால் கடன்காரர்களானதுடன், ஒருவருட காலத்திற்கு மேலாக வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாமலும் தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழியேற்படுத்திக்கொடுத்து அவர்களின் கடன்சுமையைக் குறைப்பதும் அரசின் கடமை.
ஆகவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உணவுத் திட்டத்தின் மூலமோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ மக்களின் வறுமையைப் போக்குவதற்கு இந்த அரசு முன்வரவேண்டும் என்பதுடன் வங்கிகள் விவசாயிகளைக் கசக்கிப் பிழியாமல் அவர்களிடம் மென்போக்காக நடந்துகொள்வதற்கு ஆணையிடவேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளை மேலும் துன்பப்படுத்தாமல் அடுத்த காலபோகம் வரை விவசாயிகளின் கடன்களுக்கு வட்டி அறவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இருக்கின்ற நீரைக்கொண்டு மாற்றுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியுமா என்று ஆராய்ந்து அதற்கேற்ப விவசாயிகளுக்கு உற்சாகமளிப்பதுடன் ஏற்கனவே வறுமையால் வாடும் மக்கள் தற்போதைய சூழலில் மிகவும் துன்பத்திற்குள்ளாகியுள்ளனர். தமது பிள்ளைகள் பாடசாலைகளில் அளிக்கப்படும் மதிய உணவுத் திட்டத்தால் பயனடைகின்றார்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதல்.
பெரும்பாலான பிள்ளைகள் மதிய உணவுத்திட்டத்தில் வழங்கப்படும் ஒருவேளை உணவுடனேயே காலத்தைக் கடத்துகின்றனர். ஆகவே ஒவ்வொரு குடும்பத்தினரும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இருவேளை உணவாவது உட்கொள்வதற்கு வழியேற்படுத்த வேண்டும்.
தூர்ந்துபோயுள்ள குளங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், குளங்களின் ஆழத்தை அதிகரிப்பதற்கும், பழுதடைந்துள்ள குளங்களைச் சீர்செய்வதற்கும் கிராம மக்களின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களின் அன்றாட பொருளாதாரத் தேவையை ஓரளவிற்காவது நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





