கர்நாடகத்தில் இரு மாணவிகளுக்கு இடையிலான ஓரினச்சேர்க்கை உறவு வன்முறையில் போய் முடிந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள கோனனூரில் உள்ள அரசுக் கல்லூரியல் பிஏ படித்து வருபவர்கள் வாணி, ராணி. கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்தபோது ஒரே அறையில் தங்கியுள்ளனர்.
கணவன் மனைவி போலவே நடந்து கொண்ட இருவருக்கும் 20 வயதாகிறது. இவர்கள் குறித்து கல்லூரி முதல்வரான மோகன் கூறுகையில், இருவரும் பிஏ. 2ம் ஆண்டு படித்தபோது இருவருக்குள்ளேயும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது.
விடுதியில் ஒரே அறையில்தான் தங்குவார்கள். அவர்களுக்குள் செக்ஸ் ரீதியான உறவு இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் ராணிக்கு தான் தாலி கட்டப் போவதாக வாணி, தனது சக தோழிகளிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால் அது நடக்காமல் போயுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வாணி, ராணி இடையிலான நெருக்கமான நட்பு குறித்து ராணி குடும்பத்தாருக்குத் தெரியவந்து அதிர்ந்தனர்.
இதையடுத்து அவரை உடனடியாக விடுதியிலிருந்து கூட்டிச் சென்று விட்டனர். மேலும் வாணியையும் கடுமையாக எச்சரித்துப் போயுள்ளனர். அது முதலே தனது குடும்பத்தினர் துணையுடன் கல்லூரிக்கு வந்து போயுள்ளார் ராணி.
இதனால் வாணி கடும் அதிருப்தியும், விரக்தியும் அடைந்தார். இந்நிலையில்தான் சம்பவ தினத்தன்று ராணி தனியாக கல்லூரிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த வாணி, அவர் திரும்பிச் செல்லும்போது தானும் பேருந்தில் ஏறியுள்ளார்.
பின்னர் ராணியை நெருங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி விட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாணியைத் தடுத்துப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து வாணியைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். கத்திக் குத்தில் ராணிக்கு கழுத்து, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வாணியின் புத்தகங்களில் எல்லாப் பக்கத்திலும் ஐ லவ் யூ ராணி என்று எழுதி வைத்துள்ளாராம்.





