விபத்து
லிந்துலை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் உள்ளிட்ட சாரதி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை, நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், லிந்துலையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பாடசாலை மாணவிகள் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அதில் சாரதி மட்டும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பேருந்து சாரதியை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.