சென்னையிலிருந்து பயணிகளோடு யாழ்ப்பாணம் வரவிருக்கும் விமானம் : வட பகுதி மக்களுக்கு கிடைத்த வாய்ப்புக்கள்!!

620

சென்னையிலிருந்து..

அழகிய தீவான இலங்கைக்குள் எமது அலையன்ஸ் ஏர் விமானப் பயணத்தினை இணைத்துக் கொள்வதானது பெரும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது என அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி.எஸ். சுப்பையா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இந்நிலையில் இம்மாதம் 1ஆம் திகதி விமான நிலையத்தின் போக்குவரத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வரும் பத்தாம் திகதி சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைப் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் இரண்டு தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தார்.

எனினும் சில பேச்சுவார்த்தைகள் மற்றும் சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளால் 11ஆம் திகதி போக்குவரத்து விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி.எஸ்.சுப்பையா,

இதுவரை காலமும் இந்தியாவிற்குள் தனித்துவமான சேவையினை வழங்கிவருகின்றோம். இப்போது நாங்கள் சர்வதேசத்தை நோக்கி பறக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

அழகிய தீவான இலங்கைக்குள் எமது அலையன்ஸ் ஏர் விமானப் பயணத்தின் இணைத்துக் கொள்வதானது பெரும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த சேவையானது சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான இடைவிடாத சேவையாக அமைகின்றது என்றார்.

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படும் நிலையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளுக்கான போக்குவரத்து சேவை குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிநாடு அல்லது தென்னிந்தியாவின் நகரங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் வடக்கு கிழக்கில் இருக்கிறார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கு எட்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரங்கள் எடுக்கின்றன.

ஆனால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் ஏனைய நகரங்களுக்கும் பயணங்களை மேற்கொள்வது என்பது மிகமிக எளிது என்பதாலும் நேரம் குறைவு என்பதாலும் பயணிகள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை அதிகளவில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனால் விமான நிறுவனங்களுக்கான வருமானங்களும் அதிகரிக்கும் என்பதோடு வடக்கின் அபிவிருத்தியும் இதன்மூலம் பெரு வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்றும் எதிர்வுகூறப்படுகிறது. இதேவேளை, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி, சென்னையிலிருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு வந்து சேரும். அதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம் 1.10 மணிக்கு சென்னையை அடையும் என்று அலையன்ஸ் ஏர் தெரிவித்துள்ளது. இதுவொருபுறமிருக்க, சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானசேவைகளுக்கான கட்டணம் 12ஆயிரத்து 990 ரூபா என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.