யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஆவாவின் காதலியா?

295

Avaயாழில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கியவர்கள் யாழ். நகர் பகுதி நடைபாதை வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த 6ம் திகதி கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக நியமிக்கப்பட்ட மூன்று விஷேட பொலிஸ் குழுவும், அந்த குழுவுடன் சேர்ந்து இயங்கிய ஏனையவர்களையும் தேடி வருகின்றது.

இந்த குழுவுடன் பெண் ஒருவரும் சேர்ந்து இயங்கியுள்ளதாக நாம் சந்தேகிக்கின்றோம் எமது முதற்கட்ட விசாரணைகள் மூலம் குறித்த பெண் ஆவா என்பவனின் காதலி என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து குறித்த பெண் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரை கைது செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த குழு தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து பொலிசாருக்கு வந்து கொண்டே இருக்கின்றன. இன்று காலையும் அவர்கள் யாழ் நகர் வியாபாரிகள் சிலரிடம் கப்பம் பெற்று கொண்டதாக ஒரு முறைப்பாடு யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

அக் குழுவை கைது செய்தது தொடர்பில் இதுவரை 300 க்கும் அதிகமான தொலைபேசி மூலமான வாழ்த்துக்களும் கடிதங்கள் மூலமான வாழ்த்துக்களும் பொலிசாருக்கு வந்துள்ளன.

ஆவா என்பவன் வாள் தூக்கினால் வெட்டாமல் விடமாட்டார். இதுவரை யாழில் நடைபெற்ற சில வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்பு உள்ளதாக அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என மேலும் தெரிவித்தார்.