ஆறு சந்தேகநபர்கள் கைது
வவுனியா, நைனாமடு பகுதியில் நேற்றைய தினம் புதையல் தோண்டிய குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நைனாமடு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் 6 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் ஸ்தலத்திற்கு சென்ற பொலிஸார் புதையல் தோண்டிய அறுவரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, பூஜைப் பொருட்கள், மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மரக்காரம்பளை, ஓமந்தை, நெடுங்கேணி பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அறுவரையும் மேலதிக விசாரணைகளின் பின் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.