வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் காலாவதியான சீனி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொங்கல் கால விற்பனைக்காக சுந்தரபுரம் கிளையினால் சீனி தேவை என சங்கத்தின் தலைமையகத்திற்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டதையடுத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியசாலையில் இருந்து கடந்த 7 ஆம் திகதி சுந்தரபுரம் கிளைக்கு 5 மூடை சீனி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சங்கத்தின் முகாமையாளர் இரவு 7 மணிக்கு சீனி மூடைகள் வந்தமையால் அதனை இறக்கி விட்டு மறுநாள் ஏற்கனவே இருந்த சீனியை விற்பனை செய்துள்ளார்.
இந்தநிலையில் சீனி இறக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் சுந்தரபுரம் சங்க கிளைக்கு பரிசோதனைக்காக சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள், அங்கு உடைக்கப்படாமல் இருந்த 5 மூடை சீனியும் காலாவதியாகியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து சுந்தரபுரம் கிளையின் முகாமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அறிவித்தல் வழங்கியுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகர மேற்பார்வை பொது சுகாதார பரிசாகரிடம் கேட்டபோது, அவ்வாறு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும் நாளைய தினமே முழு விபரங்களையும் அறியத்தர முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளரிடம் கேட்டபோது நடைபெற்ற சம்பவங்களை உறுதிப்படுத்தியதுடன் சீனி மூடைகள் சங்கங்களின் சமாசத்திடம் இருந்தே கொள்வனவு செய்ய்பட்டதாகவும், அவை பாவனைக்கு உகந்தவையா என்பதனை பரிசோதிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில் பொங்கல் காலம் நெருங்கி வருவதனால் வவுனியா நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு சிறந்த பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஆவன செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.