சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம் -மகேள ஜெயவர்தன..

445

Mahela Jayawardene

சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் மகேள ஜெயவர்தன கூறியுள்ளார்.

கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி, காடிப் மைதானத்தில் நாளை இந்தியாவுடன் மோதுகிறது. இந்த போட்டி குறித்து ஜெயவர்தன நேற்று தெரிவிக்கும் போது

அரை இறுதியில் இந்திய அணியை வீழ்த்த ஆவலாக உள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோற்றது பற்றி கவலைப்படவில்லை. இது மிகப் பெரிய தொடர். அரை இறுதி ஆட்டம் மிக முக்கியமானது. அதில் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.

இந்திய அணி தற்போது அபாரமாக விளையாடி வருகிறது. அவர்களின் துடுப்பாட்ட வரிசை மிக வலுவானதாக உள்ளது. அதை கவனத்தில் வைத்து வியூகம் அமைப்போம்.

ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன் கடந்ததில் திருப்தி அடைகிறேன். மற்றபடி அதை பெரிதாக நினைக்கவில்லை. அணி வெற்றி பெற எனது ஆட்டம் உதவியது என்பதே முக்கியம்.

அரை இறுதியோ, இறுதியோ எல்லா ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றே நினைக்கிறேன். அந்த முனைப்புடன் ஒருங்கிணைந்து விளையாடினால் இலங்கை அணியால் நிச்சயம் சாதிக்க முடியும். இவ்வாறு ஜெயவர்தனே கூறியுள்ளார்.