8ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் கனமழை!!

499

கனமழை

கடந்த சில தினங்களாக நாட்டின் தென் பகுதியில் நிலவி வந்த தாழமுக்கம் , தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் நாட்களிலும் தொடர கூடிய வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளன.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும். அதிகாலை வேளையில் இப்பகுதிகள் அதிகளவில் இருளாக இருப்பதை அவதானிக்க முடியும். கருமுகில் கூட்டத்துடன் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை , நுவரெலியா போன்ற மாவட்டங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் கடற்கொந்தளிப்பு தன்மையையும் காணக் கூடியதாக இருக்கும். தெற்கு, வடகிழக்கு,மேற்கு பகுதிகளை அண்மித்த கடற்பகுதிகளில் கனமழை பெய்யும்.

நாளை மற்றும் நாளை மறுதினம் மழை சற்று குறைவடைந்தாலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் மழை வீழ்ச்சி தற்போதுள்ள அளவை விட அதிகளவாக பதிவாகும், என்று தெரிவித்துள்ளார்.