சிவப்பு எச்சரிக்கை

அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, மற்றும் பதுளை மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வவுனியா , திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, நுவரெலியா, மாத்தளை, அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 ஆயிரத்து 169 குடும்பங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 275 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 21 மாவட்டங்களை சேர்ந்த 51 ஆயிரத்து 573 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 931 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




