தமிழ்ப் பெண்ணின் புகைப்படத்தை அங்கீகரித்த அப்பிள் நிறுவனம்!!

714

உஷா ஹரிஷ்ணன்

தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன் எடுத்த புகைப்படத்தை, ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன், கென்யாவின் நைரோபி பகுதியில் வசித்து வருகிறார்.

வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞரான உஷா, கிழக்கு ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் உஷா, கென்யா வனப்பகுதியில் நடந்துவரும் அழகான ஆப்பிரிக்க யானை, அதன் பின்புறத்தில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை மற்றும் அதனை சூழ்ந்துள்ள மேகம் ஆகியவற்றை ஒருசேர தன்னுடைய ஆப்பிள் ஐ போனில் படம்பிடித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், “இந்த இரண்டு ராட்சதர்களையும் ஒரே புகைப்படத்திற்குள் கொண்டுவருவது மிகப்பெரிய கனவு” என குறிப்பிடபட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் பகிரப்பட்ட அந்த புகைப்படம் தற்போது 2,45,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.