யாழ்ப்பாணம் விமான நிலையம் பல்வேறு வசதிகளுடன் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படும்!!

589

யாழ்ப்பாணம் விமான நிலையம்

யாழ்ப்பாண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவை இணைக்கும் விதமாக பிராந்திய விமான நிலையமாக யாழ்ப்பாண விமான நிலையம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதனை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ளவும், ஏனைய சர்வதேச விமான சேவைகளை இந்த விமான நிலையம் ஊடாக இயக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களைத் தரையிறக்குதல் மற்றும் பல வசதிக் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் இந்திய ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.