வவுனியா குருக்கள் புதுக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கிந்துஜா பாலச்சந்திரன் (142 புள்ளிகள் -2009ம் ஆண்டு) விஜயகுமார் யனோசன் (168 புள்ளிகள் – 2013ம் ஆண்டு) இருவருக்குமான கௌரவிப்பு பாடசாலை சமுகத்தால் 16.01.2014 நேற்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பதக்கங்கள் அணிவித்தும், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவித்ததோடு, சிறந்த பெறுபெறுகளைப்பெற்றுக்கொண்ட 11 மாணவர்களுக்கு தலா 3,000 ரூபா வீதம் வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகங்களையும், 1 முதல் 11ம் தரம் வரையான மாணவர்களுக்கு ரூபா 30,000 பெறுமதியான கற்றல் உபகரணங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரிடம், அதிபர் ஆசிரியர்களால் பாடசாலையின் வளப்பற்றாக்குறைகளை விளக்கி தேவைகள் அடங்கிய கோரிக்கை மனுவும், பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தால் பாடசாலைக்கென தனியான பாலர் பாடசாலை அலகு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் வெங்கலச்செட்டிக்குள கோட்டக்கல்வி அதிகாரி க.நித்தியானந்தன், வவுனியா தெற்கு வலயப்பிரதிநிதி இ.மாதவன், குருக்கள் புதுக்குளம் கிராம அலுவலர் ச.இராசரெத்தினம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களுமாக இணைந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பித்த ஆசிரியர் திருமதி .இராசரெத்தினத்தை பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசில்களை வழங்கியும் கௌரவித்ததோடு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.