வவுனியாவில் இராண்டாவது அம்மாச்சி உணவகமும் நிரந்தரமாக மூடப்பட்டது!!

463

அம்மாச்சி உணவகம்

வவுனியாவில் இரண்டாவது அம்மாச்சி உணவகமும் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகம் வவுனியாவில் மூன்று இடங்களில் அமைந்திருந்தது.

அதில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் கடந்த 31.10.2019 அன்று நிரந்தரமாக மூடப்பட்டதுடன்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகமும் நேற்றிலிருந்து நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.  தற்போது ஒர் அம்மாச்சி உணவகம் மாத்திரம் ஏ9 வீதியில் இயங்கி வருகின்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் வருமானம் குறைவென தெரிவித்து மூடப்பட்டிருந்த போதிலும் வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவதுடன் பணிமனைக்கு அருகே காணப்படும் தாதிய கல்லூரி மாணவர்களுக்கும் இவ் அம்மாச்சி உணவகமே அருகாமையில் காணப்படுகின்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் மூடப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஓர் ஊழியர் மாத்திரமே கடமையாற்றினார்.

அத்துடன் அம்மாச்சி உணவகத்தில் உணவுகள் திருப்தி இல்லையென தெரிவித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையில் கடமையாற்றும் ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் மூடப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகமானது அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் சில சமயங்களில் திருப்தி இல்லை மற்றும் நேர முகாமைத்துவமின்மை, முன்னறிவித்தலின்றி மூடப்படுவது போன்ற பல காரணங்களினால் நிரந்தரமாக மூடப்பட்டதுடன்,

தற்போது தனிநபர் ஒருவருக்கு ஓப்பந்தம் வழங்கப்பட்டு சிற்றூண்டிச்சாலை இம்மாத இறுதிக்குள் திறக்கப்படுமென வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.

வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகம் வடக்கில் பல பகுதிகளில் சிறப்பாக இயங்கி வருகின்ற நிலையில் வவுனியாவில் மாத்திரம் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவது ஏன்?