தமிழகத்தின் அறந்தாங்கி அருகே வயல்வெளியில் 16 வயது இளம்பெண்ணின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கருங்குலிக்காடு கிராமத்தின் வயல் பகுதியில் சுமார் 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் கிடந்தது.
இதுபற்றி அப்பகுதியினர் கொடுத்த தகவலில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்ட சிறுமி பேராவூரணி அருகே உள்ள ஆவுடையானி கோட்டையை சேர்ந்த ரவி என்பவரது மகள் சரண்யா (16) என தெரியவந்தது.
சரண்யா 7ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரை கடந்த 16ம் திகதி மதியம் 3 மணிக்கு அவரது பெரியப்பா கணேசனின் மகன் நீலகண்டன் (25) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்தான் சரண்யா கருங்குலிகாடு வயல் பகுதியில் சடலமாக கிடந்தாள். இதனால் நீலகண்டனிடம் விசாரிக்க அவரை பொலிசார் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
இறந்து கிடந்த இளம்பெண்ணின் மூக்கு, காதில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தலையில் பலத்த காயம் இருந்தன. மேலும் சற்று தொலைவில் இருந்து உடலை இழுத்து வந்ததற்கான தடயம் காணப்பட்டது.
பொலிசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு 4 மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் கிடந்தன. மேலும் சரண்யா அணிந்திருந்த உடைகளும் அங்கு கிடந்தன.
இதனால் குடி போதையில் சரண்யாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் நீலகண்டன் உடந்தையுடன் அவரது நண்பர்கள் சரண்யாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் நீலகண்டனை தேடும் பணியை தீவிரபடுத்தி உள்ளனர். அவர் சிக்கினால் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விவரம் தெரியவரும். அண்ணன் முறையுடைய ஒருவரே நண்பர்களுடன் சேர்ந்து தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுவதால் அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





