வவுனியாவில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை : நகரசபைத் தலைவர் அதிரடி!!

393

நடைபாதை வியாபாரத்திற்கு தடை

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் அறிவித்துள்ளதாக தெரிவித்து இன்றையதினம் (14.01.2020) மாலை நகரசபை வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கியினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட சந்தை சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி சந்தி, ஹொரவப்பொத்தானை வீதி போன்றவற்றில் முன்னெடுக்கப்படும் நடைபாதை வியாபாரத்தினால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பாதசாரிகள் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபாதை வியாபாரத்தினால் வாகன நெரிசல்களும் ஏற்படுகின்றன. இவ்விடயம் கடந்த நகரசபை சபைக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது தைப்பொங்கல் வரை வியாபாரம் செய்வதற்கு நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியதுடன்,

எதிர்வரும் 16.01.2020 (வியாழக்கிழமை) இலிருந்து நகரசபைக்குட்பட்ட பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய இன்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டது.

இவ் அறிவித்தலில் நகரசபை சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய நாளை மறுதினம் (16.01.2020) தொடக்கம் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதுடன்,

தடையுத்தரவினை மீறி வியாபாரம் மேற்கொள்ளுபவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வவுனியா நகரசபைக்கு முன்பாக அங்காடி வியாபாரத்திற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரத்தினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

நடைபாதை வியாபாரத்தினால் சந்தை சுற்றுவட்ட வீதி மற்றும் இலுப்பையடி சந்தியில் பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்கள், பாதசாரிகள் நடைபாதையினை உபயோகப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தினசரி அப்பகுதியில் வீதி விபத்துக்கும் இடம்பெறுகின்றது என்பதை கருத்தில் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் இவ்விடத்தில் வியாபாரம் மேற்கொள்ள தடை விதித்து விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.