வவுனியா மன்னார் வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக தரித்து நிற்கும் கனரக வாகனங்கள்!!

338

கனரக வாகனங்கள்

வவுனியா மன்னார் பிரதான வீதியில் இன்று (19.01.2020) அதிகாலை தொடக்கம் வீதி ஓரத்தில் தரித்து நிற்கும் 10க்கு மேற்பட்ட கனரக வாகனங்களால் அவ்வீதியூடாக மக்கள் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

குறித்த கனரக வாகனங்களில் காற்றாலை அமைப்பதற்காக பீப்பாய்கள் காணப்படுகின்றன. அந்த பீப்பாய் வடிவ உருளைகள் மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

பகல் நேரங்களில் வீதியில் பயணிப்பதினால் பாரிய போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் இன்று அதிகாலை தொடக்கம் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டாணிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு போன்ற பகுதியில் வீதி ஓரங்களில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

வவுனியா – மன்னார் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் வீதியின் பெரும்பகுதியை இவ் வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்பதினால் போக்குவத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.