இலங்கையில் பால்மா விலை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் வெற்றியளிக்கவில்லை. கடந்த பல வாரங்களாகவே பால்மாவுக்கு உள்ளூர் சந்தைகயில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் பால்மா அடுக்கிவைக்கும் ராக்கைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்களும் பால்மா தேடி கடைகடையாகத் திரிகின்றனர்.
இந்த சூழ்நிலையில், பால்மா நிறுவனங்கள் தொடர்ந்தும் பெருமளவு தொகை பால்மா கையிருப்புகளை பதுக்கிவைத்திருந்து விலை அதிகரிப்புக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துவருவதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் கேட்டுக்கொண்டதன்படி, பால்மா நிறுவனங்கள் தங்களின் கையிருப்புகள் தொடர்பான தரவுகளை இன்னும் முழுமையாக அளிக்கவில்லை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்ஷூக் தெரிவித்தார்.
´பால்மா நிறுவனங்கள் மிகவும் சூட்சுமமான முறையில் தங்களின் வேலைகளை முன்னெடுத்துச் செல்கின்றன. சந்தையில் பால்மா தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் தங்கள் விலை அதிகரிப்புக்கு எங்களை நிர்ப்பந்தப்படுத்தும் வேலையில் அந்த நிறுவனங்கள் இறங்கியுள்ளன என்றார் ரூமி மர்ஷூக்.
´பால்மா தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்காமல், தங்களிடமுள்ள கையிருப்புகளை திறந்த சந்தையில் விநியோகித்து எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எல்லா நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுக்கிறோம் என்றார் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர்.
சர்வதேச சந்தையில் விலை உயரமுன்னமே கொள்வனவு செய்யப்பட்ட 20 பால்மா கொள்கலன்களை திறந்த சந்தைக்கு விநியோகிக்காமல் நிறுவனங்கள் பால்மா தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விலை அதிகரிப்பு தொடர்பான முடிவு எப்போது எடுக்கப்படும், எப்போது பால்மா தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் என்பது போன்ற கேள்விகளுக்கு உடனடியான பதில் தம்மிடம் இல்லை என்றும் ரூமி மர்ஷூக் கூறினார்.
இதனிடையே, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் விலை அதிகரிப்புக்கு முகம்கொடுக்க முடியாமல் தமது இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக பால்மா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
2012ம் ஆண்டளவில் ஒரு மெட்ரிக் தொன் பால்மாவின் விலை 3700 டொலராக ஆக இருந்தது. இப்போது 5200 டொலர் வரை விலை உயர்ந்துவிட்டது. அன்று 325 ரூபாவுக்கு இருந்த பால்மா பக்டெ்டை இன்று எப்படி அதே விலைக்கு நாங்கள் விற்பது´ என்று கூறினார் மில்கிரோ என்ற பால்மா நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் கிரிஷாந்த பெர்ணான்டோ.
விலை அதிகரிக்கும் நோக்குடன் பால்மா கையிருப்புகளை பதுக்கிவைத்திருப்பதாக பால்மா நிறுவனங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்தார்.
இலங்கை பசும்பாலில் தன்னிறைவு அடையவேண்டும் என்று அரசு கூறிவந்தாலும், மக்கள் அன்றாடத் தேவைகளுக்கு இறக்குமதியாகும் பால்மாவினையே பெரும்பாலும் இன்னும் நம்பியிருக்கின்றனர்.
மற்ற அத்தியாவசியப் பொருட்களைப் போல பால்மா விலை அதிகரிப்பும் இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-BBC தமிழ்-





