வவுனியாவில் கவனிப்பாரற்றுக்கிடக்கும் சர்வதேச விளையாட்டரங்கை திறக்க ஈ.பி.டி.பி நடவடிக்கை!!

275

ஓமந்தையில்..

வவுனியா, ஓமந்தையில் சர்வதேச தரத்துடன் பல கோடி ரூபா செலவுடன் அமைக்கப்பட்ட விளையாட்டரங்கு கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை தொடர்பாக விளையாட்டு வீரர்களால் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து,

அதனை உடன் திறக்க நடவடிக்கை மேற்கோள்ளப்படவுள்ளதாக ஈ.பி.டி.பி யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் பல கோடி ரூபா நிதியில் சர்வதேச தரத்துடன் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அதனை திறந்து வைத்து வவுனியா மட்டுமன்றி இலங்கை வீரர்கள் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படாமையால் இன்று குறித்த பகுதி பற்றைக்காடாக காணப்படுவதுடன் அங்குள்ள பொருட்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.

இது தொடர்பாக வீரர்கள் எமது கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து உடனடியாக விளையாட்டரங்கை நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தோம்.

அங்கு கட்டிடம் பாரிய சேதமடைந்த நிலையில் நீச்சல் தடாகத்தில் உள்ள நீர் அழுக்கடைந்த நிலையில் காணப்படுவதுடன் விளையாட்டு திடல்கள் கால்நடைகள் தங்குமிடங்களாகவும் காணப்படுகின்றன.

எனவே இவ்விடயம் தொடர்பாக உடனடியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் அவர் ஊடாக உடனடியாக விளையாட்டரங்கை திறந்து விளையாட்டு வீரர்களுக்கு பயன்பட ஆவணசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.