வவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் உண்மையை வெளியிட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர்!!

744

அம்மாச்சி உணவகம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் இம்மாத ஆரம்பத்தில் மூடப்பட்டது. இது தொடர்பிலான உண்மை தன்மையினை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

வைத்தியசாலையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகத்திற்கான வாடகை அதிகமாக அறவிடப்பட்டதன் காரணமாக அம்மாச்சி உணவகம் மூடப்பட்டதாக ஊடகங்கள் மூலம் வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் வினவிய போதே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கருத்து வெளியிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகத்தினை எமது வைத்தியசாலையில் அமைக்கும் நோக்கில் வவுனியா விவசாய திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் அனுசரணையுடன் அமைத்தோம்.

குறித்த சிற்றுண்டிசாலைக்கு விலை மதிப்பிட்டு திணைக்களத்தினால் மாதாந்தம் 60,000 ரூபா என தெரிவிக்கப்பட்டது.

எனினும் இலாப நோக்கற்று இயங்குவதினாலும் பெண்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு இயங்குவதினாலும் குறித்த சிற்றுண்டிசாலையினை மாதாந்தம் 30,000 ரூபா என்ற அடிப்படையில் (நாளுக்கு 1000 ரூபா) அம்மாச்சி உணவகம் அமைக்க அனுமதி வழங்கியிருந்தோம்.

அம்மாச்சி உணவகம் எமது வைத்தியசாலையில் இயங்கிய காலத்தில் அம்மாச்சி உணவகம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

உணவு சரியில்லை, நேர முகாமைத்துவமின்மை, முன்னறிவித்தலின்றி மூடுவது போன்ற பல முறைப்பாடுகள் நோயாளிகள் மற்றும் ஊழியர்களினால் எமக்கு கிடைக்கப்பெற்றது.

மாதாந்தம் 30,000 ரூபா பணத்தினை கூட சீராக செலுத்தவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா மாத்திரமே வாடகை. 10 மாதங்கள் அம்மாச்சி உணவகம் எமது வைத்தியசாலையில் இயங்கியது.

ஆனால் அவர்கள் இதுவரை எமக்கு 2,85,900 ரூபா பணமே செலுத்தியுள்ளனர். மிகுதி 14,100 ரூபா பணம் மற்றும் ஒரு யூஸ் தயாரிக்கும் இயந்திரத்திற்குரிய பணத்தையும் சேர்த்து மொத்தமாக 25,700 ரூபா எமக்கு செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால் இதுவரை மிகுதிப் பணம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக சிற்றுண்டிசாலை வாடகைப் பணத்தினை அரசாங்கத்திற்கு அனுப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அம்மாச்சி உணவத்தின் செயற்பாடுகள் காரணமாக இவர்களுடனான ஒப்பந்தத்தினை நீக்கி தற்போது தனிநபர் ஒருவருக்கு வழங்கியுள்ளோம்.

வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்திற்கு மாத வாடகையாக 90,000 ரூபா வழங்க வேண்டியிருந்தது, இவற்றை ஈடு செய்ய முடியாமையினாலேயே குறித்த உணவகத்தினை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது என வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற நிலையிலும் அம்மாச்சி உணவகத்திற்கு வருமானம் போதாது என தெரிவித்து மூடியுள்ளதாக வவுனியா விவசாய திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.