எரிபொருட்களின் விலைகள்

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிசக்தித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கத்தின் விலை மீளாய்வு திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி தற்போது டீசலின் விலை 12 ரூபாவாலும் பெற்றோல் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிக்கவேண்டும்.

எனினும் மக்கள் மீது பாரத்தை சுமத்தாது அரசாங்கம் நிதானப்போக்கில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தால் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் எரிபொருள் மீளாய்வு திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் இரத்துச்செய்யப்போவதாக தெரிவித்த நடைமுறை அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் எரிபொருள் மீளமைப்பை மாற்றுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




