வவுனியா மாவட்ட குளங்களில் மீன் குஞ்சுகள் விடும் வேலைத்திட்டம்!!

680

குளங்களில்..

கடற்றொழில் மற்றும் நீர் வள மூலங்கள் அமைச்சின் திட்டத்திற்கமைவாக பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றன. நேற்றும், இன்றும் இடம்பெற்றுவரும் இச்செயற்திட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நன்நீர் நிலைகளை பெருமளவில் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக மாவட்டத்தின் பல்வேறு குளங்களில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் பிரகாரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தின் காத்தார் சின்னகுளம், பெரியார் குளம், கருப்பனிச்சான் குளம், அலபத்த குளம், அழகர் சமளங் குளம், கல்நாட்டின குளம், கோவில் குளம், கருங்காலிக் குளம், கதிரங் குளம், திறப்பன குளம் ஆகிய 10 குளங்களில் திலாப்பியா, ரோகு, கட்லா வகையான மீன்குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டுள்ளன.

தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையினர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டு இத் திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினூடாக விடப்படும் மீன்கள் எதிர்வரும் மே மாதமளவில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படகின்றது. இதன் மூலம் கிராமிய நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தமது வருமானத்தை பெருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.