
ஊடகங்களின் மூலம் எமது பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதீர் என பாவற்குளம் கணேஸ்வரா வித்தியால பாடசாலை சமூகம் கோரிக்கை விட்டுள்ளது.
இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கபபட்டுள்ளதாவது,
எமது பாடசாலையின் அதிபர், பிரதி அதிபரின் கைப்பை மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பாகவோ அல்லது வேறு பாடசாலை சமூகத்தின் முன்பாகவோ எந்தப் சந்தர்ப்பங்களிலும் சோதனையிடவில்லை என்பதை சம்பந்தப்பட்ட பிரதியதிபரின் சம்மதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிபர் சோதனை செய்ததாக வலயக் கல்விப் பணிமனையிடமோ அல்லது மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடமோ எந்த முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் சில இணையத்தளங்கள் எமது பாடசாலையின் முகப்பு படத்தினை பிரசுரித்து எமது பாடசாலை அதிபர், பிரதி அதிபரின் கைப்பையை ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னால் சோதனை செய்ததாகவும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான செய்தி தொடர்பில் நாம் மனம் வருந்துவதுடன் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என ஒட்டுமொத்த பாடசாலை சமூகமும் இணைந்து இச் செய்தியை கண்டிப்பதுடன்,
எமது பாடசாலையின் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் வகையில் அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




