டோனிக்கு மட்டும் ஏன் இப்படியான சலுகைகள் : பிஷன் சிங் பேடி ஆவேசம்!!

487

Bishan singhஇந்திய கிரிக்கெட் சபையின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வரும் ஒரே அணித்தலைவர் டோனி தான் என பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான அணித்தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் டோனி. கடந்த 2007ம் ஆண்டில் 20-20, 2011ம் ஆண்டில் 50 ஓவர் போட்டிகளில் உலக கிண்ணத்தை வென்று தந்தார். 2013ம் ஆண்டில் சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றினார்.

இதனால் கிரிக்கெட் உலகமே டோனியை புகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இவரை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அணித்தலைவர் பிஷன் சிங் பேடி. இதுகுறித்து அவர் கூறுகையில்..

என்னைப் பொறுத்த வரையில் நான் டோனியின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால் ஒன்று மட்டும் உறுதி பி.சி.சி.ஐ.யின் அதிகாரம், சலுகைகளை அதிகமாக அனுபவித்து வரும் ஒரே அணித்தலைவர் டோனி தான்.

டைகர் பட்டோடி, கவாஸ்கர் கூட இப்படி சலுகை மற்றும் சுதந்திரத்தை பெற்றிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இவரை சகவீரர்கள் கூட எளிதில் அணுக முடியாது. கடந்த 2012ம் ஆண்டில் லட்சுமண் ஓய்வு பெற்ற போது இதை டோனியிடம் தெரிவிக்க முயன்றார்.

ஆனால் டோனி எங்கிருக்கிறார் என்றே லட்சுமணால் கண்டறிய முடியவில்லை. பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுக்கும், சென்னை அணியின் சில வீரர்களுக்கும் தொடர்புகள் உள்ளன.

உதாரணமாக புஜாராவையும், ரெய்னாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். ரெய்னாவை விட புஜாரா நன்றாகத்தான் விளையாடுகிறார். ஆனால் பி.சி.சி.ஐ. வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரெய்னாவுக்கு ஏ பிரிவு (1 கோடி), புஜாராவுக்கு பி பிரிவு (50 லட்சம்).

இதற்கு ரெய்னாவுக்கும் சீனிவாசனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.