கப்பலை கரை சேர்ப்பது போரில் வெல்வது போல : இந்தியாவின் முதல் மாலுமியான தமிழ் பெண் பகிர்வு!!

857

முதல் மாலுமியான தமிழ் பெண்

விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதைவிட தன்னைப்போல் அதிக பெண்கள் அந்த துறைக்கு வந்தால் அதைவிட பெருமையடைவேன் என்கிறார் சென்னையில் பிறந்து மேற்கு வங்கத்தில் பணியாற்றி தற்போது உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் ரேஷ்மா நிலோஃபர்.

“ஒரு தமிழ்ப் பெண்ணாக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன். சென்னையில் பிறந்து வளர்ந்த நான் முதன்முதலில் பயிற்சிக்காக மேற்கு வங்கம் சென்றபோது மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டேன்” என்று கூறும் ரேஷ்மா தனது சாதனைக்கு பின்னால் உள்ள சவால்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

2011-ஆம் ஆண்டு செய்தித்தாள் விளம்பரம் ஒன்றை பார்த்து பயிற்சி நிலை மாலுமி பணிக்கு விண்ணப்பித்து, ஆறரை ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு 2018-ஆம் ஆண்டில் நதி மற்றும் கடல் மாலுமியாக தகுதி பெற்ற ரேஷ்மா தற்சமயம் கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி துறைமுகத்தில் பைலட்டாக,

விமான பைலட் குறித்து அனைவரும் அறிவார்கள். ஒரு கப்பலில் பைலட்டின் பணி என்ன? என்று நிலோஃபரிடம் கேட்டோம். ”விமானத்தை போன்று கடல் சார்ந்த பணிகளிலும் பைலட் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பணி இருப்பது குறித்து பலருக்கும் தெரியவில்லை.

ஒரு கப்பல் என்று எடுத்துக்கொண்டால் டெக் எனப்படும் கப்பலின் மேல்தட்டு பிரிவு மற்றும் இன்ஜினியரிங் எனப்படும் நுட்பம் தொடர்பான தளம் என இரு பிரிவுகள் உள்ளன. கப்பலை செலுத்துவது, கடல் மார்கத்தை திட்டமிடுவது, நீர்வழி போக்குவரத்து நெரிசல் குறித்து தொடர்ந்து கண்காணிப்பது, மற்ற பணியாளர்களுடன் தொடர்பு கொள்வது, போன்றவை கப்பலின் மேல்தட்டு பிரிவு அதிகாரிகளின் (டெக் ஆஃபீசர்) முக்கிய பணிகளாகும்” என்று அவர் கூறுகிறார்.

”நுட்ப பிரிவின் உயரதிகாரி கப்பலின் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். அதே போல கப்பலின் மேல்தட்டு பிரிவு அதிகாரிகளின் தலைமை அதிகாரிதான் பைலட். ஒட்டுமொத்த கப்பலுக்கு தலைமை வகிப்பவர் கேப்டன் என்றாலும் அந்த கேப்டனுக்கு கடல்சார்ந்த அறிவுரைகளை வழங்குவதுடன் ஒரு துறைமுகத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்தான் பைலட்” என்கிறார் 31 வயதாகும் தமிழ்ப் பெண் ரேஷ்மா.

கடல் சார்ந்த பணி எவ்வளவு ஆபத்தானது? : கப்பல்களில் பணியாற்றுபவர்கள் குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ அல்லது தேவை ஏற்பட்டால் உடனடியாக வீட்டிற்கு செல்லவோ முடியாது என்றும் தொடர்ந்து பல மாதங்கள் ஒரே கப்பலிலேயே பணியாற்ற வேண்டுமென்றும் பரவலாக கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உண்மையிலேயே கப்பலில் பணியாற்றுவது என்பது எந்தளவுக்கு சவால் நிறைந்தது என்று ரேஷ்மாவிடம் கேட்டபோது, “பெருங்கடல் பகுதியில் சிக்கிக்கொண்டால் கடலை கடக்க சுமார் பத்து நாட்கள் ஆகலாம்.

கப்பலில் அவசரநிலை ஏற்பட்டால் ஹெலிகாப்டரை உடனே வரவழைத்து அங்கிருந்து தப்பிக்க முடியாது. பல மணி நேரமோ சில நாட்களோ உதவி வரும்வரை காத்திருந்து துறைமுகத்தை அடையும்வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். இதன் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்களை இழக்கும் சூழ்நிலை நேரிடலாம்.”

”கப்பலில் கேப்டனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவருக்கு மாற்றாக அடுத்த நிலை அதிகாரி பொறுப்பேற்பார். ஆனால் மாலுமிக்கு மாற்று வேறு யாருமே கிடையாது. ஒருவேளை மாலுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால் கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.

மாலுமி இல்லாமல் கப்பல் ஒரு அடிகூட நகரவோ துறைமுகத்திற்குள் நுழையவோ முடியாது” என்று ரேஷ்மா கூறுகிறார். ‘கப்பலை கரை சேர்ப்பது போரில் வெல்வது போல”

இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி மட்டுமின்றி நதிகளில் கப்பலை இயக்கும் முதல் பெண் மாலுமியாகவும் அறியப்படும் ரேஷ்மாவிடம், கடற்பரப்பில் கப்பலை செலுத்துவதற்கும், நதிகளில் கப்பலை செலுத்துவதற்கும் உள்ள வேறுபாடு குறித்து கேட்டபோது, “கடலில் பயணிப்பதைவிட நதிகளில் கப்பலை செலுத்துவது மிகவும் ஆபத்தானது.

நதிகள் கடல் அளவுக்கு ஆழமானது இல்லை என்றாலும் அதன் அலைகள் மிகவும் வேகமானது. அதுமட்டுமின்றி, எல்லா நதிகளிலும் கப்பல்கள் பயணிக்க முடியாது. அந்த வகையில், நான் பணிபுரியும் ஹூக்ளி நதியில் அமைந்துள்ள கொல்கத்தா துறைமுகம், கப்பல் பயணம் மேற்கொள்ளக்கூடிய உலகின் மிகவும் ஆபத்தான நதி வழி பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சுருங்க சொன்னால் ஒரு கடல் மாலுமி ஆவதற்கு ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்; நதி மாலுமி ஆவதற்கு இரண்டு ஆண்டுகால பயிற்சி தேவைப்படும்” என்று கூறுகிறார் ரேஷ்மா.

இதுவரை இவர் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சுமார் நாற்பது நாடுகளுக்கு கப்பலை இயக்கிச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று, பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ ரேஷ்மாவுக்கு வழங்கப்பட்டது.

முறையான கல்வித் தகுதியுடன் முதலில் ஒரு கப்பலுக்கு கேப்டனாக சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகே ஒருவர் துறைமுகங்களில் மாலுமியாக முடியும். ஒவ்வொரு கப்பலையும் பல போ ராட்டங்களைத் தாண்டி பாதுகாப்பாக கரை சேர்ப்பது ஒரு போரில் வெல்வது போன்றது என்றும் தான் தினமும் ஒரு போ ரில் வெற்றி பெறுவதால் இந்த பணி மிகுந்த மன நிறைவை தந்துள்ளதாக இவர் கூறுகிறார்.

கப்பல் பணிகளில் குறைவான பெண்களே இருக்க என்ன காரணம்? உலகளவில் கப்பல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே என்கிறது சர்வதேச கடல்சார் நிறுவனத்தின் அதிர்ச்சி அளிக்கும் தரவு.

இந்நிலையில், மற்ற துறைகளை போன்று பெண்கள் கப்பல் சார்ந்த பணிகளில் சாதிப்பதற்கு தடையாக இருப்பது எது என்று அவரிடம் கேட்டபோது, “கப்பலில் ஏற கயிற்றால் செய்யப்பட்ட ஏணி இருக்கும்.

நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கும் இந்த ஏணியை பிடித்து ஏற வேண்டும் என்பதே பெண்களுக்கு சவாலான பணிதான்” என்றார். ”நான் இயக்கிய கப்பலில் இதுவரை நான் மட்டுமே ஒரே பெண்ணாக இருந்திருக்கிறேன். கப்பல் துறையில் கட்டளையிடும் தலைமை பணியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே உள்ளனர்.

ஆனால், சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் பெண்களுக்கு வானம் கூட எல்லை இல்லை. ஏனென்றால் வானையும் தாண்டி விண்வெளியிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்கள். வலி, அழுத்தம், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது போன்ற திறன்கள் இயற்கையாகவே பெண்களுக்கு அமைந்திருக்கின்றன.

ஆனால் பெண்களால் இதை செய்ய முடியாது அதை செய்ய முடியாது என்று சமூகம் சொல்வதை கேட்டு வளர்வதால் பெண்கள் தங்கள் திறமை மீதே சந்தேகம் கொள்கின்றனர்” என்று கூறுகிறார் அவர். ”இந்தியாவில் பெண்களைக்கூட பைலட் ஆக்குகிறார்களா?…”

ஒரு பெண் மாலுமி தனது கப்பலை இயக்கப்போகிறார் என்பது தெரிந்ததும் பயணிகள் என்ன கூறுவார்கள்? ஏதாவது சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிருங்கள் என்று நிலோஃபரிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர், ”பைலட்டாக ஒரு பெண்ணா? இவர் நம்மை பாதுகாப்பாக கரை சேர்த்துவிடுவாரா? என்ற சந்தேகத்தோடு பலரும் என்னை பார்த்திருக்கிறார்கள்.

சிலர் எங்கள் கப்பலை ஒரு பெண் மாலுமி இயக்குகிறார் என்பது பெருமையாக உள்ளது. உங்களை போல் பல பெண்கள் இந்த துறைக்கு வர வேண்டும் என்பார்கள்” என்றார்.

ஒரு நாள் இரவு, தனக்கு சீன கப்பலை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது தான் கப்பலுக்குள் வருவதை பார்த்தவுடன், பின்னால் ஆண் யாராவது வருகிறாரா என்று அதன் கேப்டன் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், நான் தான் பைலட் என்று சொன்னவுடன் அவர் மிகவும் ஆச்சர்யமடைந்ததாகவும் ரேஷ்மா கூறுகிறார்.

“இந்தியாவில் பெண்களையெல்லாம் பைலட் ஆக்குகிறார்களா என்று அவர் கேட்டார். நீங்கள் அதிஷ்டசாலி, அதனால் இந்தியாவில் உள்ள ஒரே பெண் பைலட் இன்று உங்களுடன் பணியாற்ற போகிறார் என்று சொன்னேன்.

தொடக்கத்தில் என் பணித்திறன் குறித்து சந்தேகித்த அவருக்கு, நான் பேச பேச என் மீதான நம்பிக்கை அதிகரித்தது. வேலை முடிந்தவுடன், நான் உங்களை குறைத்து எடை போட்டுவிட்டேன்.

அதற்கு முதலில் மன்னிக்கவும். நீங்கள் சிறப்பாக பணியாற்றினீர்கள் என்று பாராட்டினார்” என்று பெருமைப்பட கூறும் ரேஷ்மா இந்த சம்பவத்தை தன்னால் மறக்கவே முடியாது என்றார். ”முயற்சிக்கும் முன்னரே முடியாது என்று சொல்லாதீர்கள்”

”இப்போதைக்கு என்னுடைய இலக்கு உலகம் முழுவதிலும், குறிப்பாக இந்திய பெண்களுக்கு கப்பல் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கடல் உலகில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதே” என்கிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு சென்று பெண்களை மத்தியில் ஊக்க உரையாற்றிவரும் ரேஷ்மா. கடல் சார் பணிகளில் அதிக பெண்கள் வருவதற்காக அவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, பல பெண்கள் குழுக்களில் உறுப்பினராக இருப்பதன் மூலம் அவர்களுக்கு உதவியும் வருகிறார்.

“ஒன்றை முயற்சித்து பார்த்தால்தான் நம்மால் அதை செய்ய முடியுமா என்றே தெரியவரும். உங்களுக்கு நீச்சல் அடிக்க வராது என்று நினைத்தால் மறுநாளே நீச்சல் வகுப்பில் சேருங்கள். முயற்சிக்கும் முன்னரே முடியாது என்று யாரவது சொன்னால் அதை புறந்தள்ளிவிட்டு முன்னேறுங்கள்.”

– BBC – Tamil