வவுனியா-நெடுங்கேணி பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு கோரிக்கை!!

312

Nedunkenyவவுனியா நெடுங்கேணியூடாக செல்லும் பேரூந்துகளை நெடுங்கேணியில் அமைந்துள்ள மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் சார்பில் அதன் உப தலைவர் எஸ்.தணிகாசலம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது.

நெடுங்கேணியில் மத்திய பேரூந்து தரிப்படம் தேவை என்பதனை கருத்தில் கொண்டு பல இலட்சம் ரூபா செலவிட்டு தரிப்பிடம் அமைக்கப்பட்டதுடன் கடைத்தொகுதிகளும் அமைக்கப்பட்டு அமைச்சர் ரிசாட் பதியுர்தீனால் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் இதுவரை காலமும் இத் தரிப்பிடத்தில் பேரூந்துகள் அரிக்காததுடன் வீதியோரங்களில் தரிக்கப்படுகின்றது. இது போக்குவரத்துக்கு இடையூராக காணப்படுவதுடன் பயணிகளுக்கும் சிரமமாகவுள்ளது.

அத்துடன் மத்திய பேரூந்து நிலையத்தை மையப்படுத்தி பொதுச்சந்தையும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இது விவசாய பிரதேசமான வவுனியாவில் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இலகு தன்மை கருத்தி அமைக்கப்பட்டதாகும்.

இவ் விடயம் தொடர்பான எமது பிரதேச சபையினால் இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டபோதிலும் அதன் முகாமைத்துவம் உரிய நடவடிகைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பேரூந்துகளோ தனியார் பேரூந்துகளோ மத்திய தரிப்பிடத்தில் நிறுத்தாமல் வீதியோரத்தில் நிறுத்தப்படுவது இனி வரும் காலங்களில் தடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.