மரண தண்டனை பெற்றுள்ள கைதிகளுக்கு அதனை ஆயுள் சிறை தண்டனையாக குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை ஆராயவென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சின் செயலாளர் கமலநீ டி சில்வா தலைமையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
போகம்பர சிறையில் மரண தண்டனை பெற்றுள்ள கைதிகள் கூரை மீதேறி தமக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அது குறித்து ஆராயப்படும் என அதிகாரிகள் கைதிகளிடம் தெரிவித்ததை அடுத்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன்படி, தற்போது மரண தண்டனை பெற்றுள்ள கைதிகள் குறித்த தகவல் அடங்கிய அறிக்கை ஒன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மரண தண்டனை கைதிகள் குறித்து ஆராய விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை பெற்றுள்ள ஒவ்வொரு கைதி குறித்தும் தனித்தனியே ஆராயுமாறு நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், விசாரணை குழுவிற்கு பணித்துள்ளார். மரண தண்டனை பெற்ற 425 பேர் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




